கல்விக் கடனுக்கு ‘பெப்பே’ காட்டும் வங்கிகள், கோடீஸ்வரர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்குவதாக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கேளூரை சேர்ந்த ஏழை மாணவி மதியழகி கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டில் பொறியயல் படிப்புக்காக வங்கியில் கல்விக் கடனாக 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்காத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றமும் கல்வி கடன் வழங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, கோடீஸ்வரர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள் ஏழை மாணவிக்கு கல்வி கடன் கொடுக்காமல் அலைகழித்தற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என தெரிவித்தனர்.
மாணவி மதியழகி படிப்பை முடிக்கும் வரை இந்த வழக்கை இழுத்தடித்து அவருடைய கோரிக்கையே வங்கி செல்லாததாக ஆக்கி விட்டது என்றனர். 50 நிறுவனங்கள் 48 ஆயிரம் கோடி வரை கடனை வங்கிக்கு திருப்பி செலுத்தாத நிலையில் கல்வி கடனை திருப்பி செலுத்தாவர்கள் என்று எந்த வழக்கும் இதுவரை இல்லை. கடன் மறுப்பதால் விஞ்ஞானிகள், டாக்டர்கள், பொறியாளர்களின் சேவை நாடு பெறுவதை மறுத்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்திய வங்கி நிர்வாகத்திற்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து அந்த தொகையை 2 வாரத்தில் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டனர்.