கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக-வினர் தூர்வாரினர். அந்த குளத்தை ஆய்வு செய்ய சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இது போல எதிர்காலத்தில் கட்சராயன் ஏரி போன்ற அனைத்து ஏரி, குளங்களையும் ஸ்டாலின் ஆய்வு செய்வதை தடுக்க கூடாது என கோரி திமுக சட்டபிரிவு செயலாளர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலினை பார்க்க விடாமல் தடுத்தது சட்ட ரீதியிலான பிரச்சனையா? இல்லை கௌரவ பிரச்சனையா? என நீதிபதி கேள்வி எழுப்பி இது தொடர்பாக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேலம் ஆட்சியர் சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,"எந்த இடத்துக்கு செல்லவதற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அடிப்படை உரிமையுள்ளது. ஆனால் குறிப்பிட்ட நபர் ஒரு இடத்துக்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் அவரை தடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. எனவே ஸ்டாலின அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்படும் என்பதால் தான் அவரை பார்வையிட வேண்டாம் என்று தடுத்தோம் என தெரிவித்திருந்தார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மூர்த்தி தாக்கல் செய்த பதில் மனுவில்,"குடிமராமத்து பணிகள் கடந்த மார்ச் மாதம் அரசு அறிவித்து, நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் பல இடங்களில் நடைபெற்று வரும்போது, ஸ்டாலின் கட்சராயன் குட்டையை மட்டும் பார்வையிட செல்வது ஏன்? இவர் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிப்படையும் என்பதால் அனுமதிக்கவில்லை. மேலும் ஸ்டாலின் பிற இடங்களில் பார்வையிட்டபோது தடுக்கப்படவில்லை" எனவும் தெரிவித்திருந்தாரர்.
எனவே முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் பெறவே இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது.மேலும், ஸ்டாலின், திமுக-வுக்கு ஏரி தூர் வார யார் அனுமதியளித்தது? அனுமதி கடிதங்கள் எங்கே? என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே கட்சராயன் குட்டையை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுடன் எத்தனை பேர் செல்ல அனுமதிக்கபடுவர் என அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை தள்ளி வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.