Advertisment

நீட் தேர்வு விவகாரம்: அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக வெளிநடப்பு!

அப்போது அரசு கவனம் செலுத்தாததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நீட் மசோதா உள்ளது என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வு விவகாரம்: அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக வெளிநடப்பு!

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

Advertisment

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதில், "மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும். கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.

மேலும், மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாடதிட்டங்களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக் கூடாது. மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். எனவே அந்த அரசாணையை ரத்து செய்கிறேன்" என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பின் விவரங்கள் கிடைத்தவுடன் மேல்முறையீடு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம். மாநில அரசு இதற்கு தேவையான அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தக் கடிதம் எழுதி அதனை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து அவரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களின் கையெழுத்தைப் பெற்று, அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுகவினர் எழுப்பினர். அப்போது அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அதில், "நீட் விவகாரத்தில் சட்டரீதியாக, அரசியல் ரீதியாக தமிழக அரசு போராடி வருகிறது" என விஜயபாஸ்கர் பதில் அளித்தார். ஆனால், அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அரசு கவனம் செலுத்தாததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நீட் மசோதா உள்ளது என துரைமுருகன் குற்றம்சாட்டினார். மேலும், நீட் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Dmk Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment