திமுக.வில் மின்னிக் கொண்டிருந்த ‘பொன்’, ரொம்பவே மங்கிக் கொண்டிருக்கிறது இப்போது!
மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைவராக பொறுப்பேற்றால், இந்தப் ‘பொன்’ பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பார் என நம்பப்பட்ட காலம் ஒன்று இருந்தது! திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவர் இவர்! தற்போதைய பொதுச்செயலாளர் அன்பழகனைப் போலவே கல்வித் தகுதி கொண்டவர்!
மு.க.ஸ்டாலினுக்கும், கருணாநிதியின் மொத்த குடும்பத்திற்கும் அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்! ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே ஸ்டாலினுடன் அவருக்கு முழுமையாக அலைவரிசை ஒத்துப் போகவில்லை.
அண்மையில் ஒரு ‘பிரஸ் மீட்’டில், மு.க.ஸ்டாலின் அருகே நிற்பதில் இவருக்கும், சென்னை நிர்வாகி ஒருவருக்கும் இடையே நடந்த உரசல் வீடியோக் காட்சிகளாகவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்னையில் செயல் தலைவர் தனக்கு ஆதரவாக பேசுவார் என்கிற இவரது எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே!’ என அதில் ரொம்பவும் நொந்து போனார் இவர். அது இப்போது கட்சித் தலைமை மீதான கோபமாக உருவெடுத்து விட்டதாக தெரிகிறது. அண்மையில் ஊரில் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றை இவரது குடும்பத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.
பழைய ‘பொன்’னாக இருந்திருந்தால், ஸ்டாலின் அங்கே நின்றிருப்பார். ஆனால் இப்போது வேறொரு கட்சியை நிர்வகிக்கும் ‘கல்வித் தந்தை’ ஒருவரின் வாரிசுத் தலைவர் அந்த பெட்ரோல் பங்கை திறந்து வைத்திருக்கிறார். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
ரஜினிகாந்த், கமல் என அரசியல் அரங்கில் காட்சி மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பொன்’னான நிர்வாகி அதிரடியான முடிவுகளை எடுக்கலாம்.