கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தடைசெய்யப்பட்ட பான் குட்கா பாக்கெட்டுகளை திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்தனர்.
குட்கா, பான்மசாலா விற்பனை அதிக அளவில் தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகவும், அமைச்சர், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக வருமானவரித்துறை கடிதத்தை காரணம் காட்டி மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஆனால் சபாநாயகர் அவர் பேச அனுமதி மறுத்தார். சட்டப்பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்ததாக இந்தப் பிரச்சினையை உரிமைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழுவினர் சட்டசபைக்குள் தடைசெய்யப்பட்ட பான், குட்கா பொருட்களை கொண்டு வந்தது குறித்து மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், மா.சுப்ரமணியம், கே.பி.பி.சாமி, சேகர்பாபு, ரங்கநாதன், புகழேந்தி, கோவி செழியன் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலரை சந்தித்த திமுக எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதில், உரிமைக்குழு நோட்டீசுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், "பெரும்பான்மையை இழந்துள்ள ஆட்சி என்பதால், இந்த ஆட்சிக்கு உரிமைக்குழுவை கூட்டுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. எனினும், எங்களது கடமைகளை நாங்கள் சரிவர செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பேரவை செயலரிடம் கடிதம் அளித்துள்ளோம். சட்ட ரீதியில் தகவல்களை சேகரித்து தர வேண்டும் என்பதற்காக, 15 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து, இன்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'தி.மு.க உறுப்பினர்களைத் தகுதி நீக்கம்செய்து அதன்மூலம் பெரும்பான்மையை நிலைநாட்ட தமிழக அரசு முயற்சிக்கிறது' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.