திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்டோபர் 20-ம் தேதி (இன்று) நடைபெறும் என ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூடினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
1.டெங்கு காய்ச்சலில் மக்கள் கொத்து கொத்தாக மடிவதை இந்தக் கூட்டம் ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது. இதில் அரசின் தாமதமான நடவடிக்கைக்காக காத்திராமல் உடனே கழகத்தினரை டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடச் செய்த கழக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், அந்தப் பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்ட கழகத் தொண்டர்களுக்கும் இந்தக் கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
2.டெங்குவை கட்டுப்படுத்த தவறிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை செய்யாத அதிமுக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. முதல் அமைச்சரின் தொகுதியிலேயே டெங்குவால் 1110 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதை பார்வையிட வந்த மத்தியக் குழு அதை மறைத்து, மொத்தமே 40 பேர் பலி என்பதாக கூறியிருக்கிறது.
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரே பாராட்டுவது அதிமுக அரசின் அடுக்கடுக்கான ஊழலுக்கு உடந்தையாகும். கையாலாகாத இந்த அரசை பாராட்டுவதை விட்டுவிட்டு, தமிழகத்தை மருத்துவ நெருக்கடி நிலையை அறிவித்து, சுகாதார பேரிடர் என கூறத்தக்க வகையில் இங்கு உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முடுக்கி விடவேண்டும்.
3.அதிமுக அரசின் ஊழல் அமைச்சர்கள் எப்படியாவது தங்கள் பதவிகளை தக்கவைக்க, மத்திய அரசின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து திராவிட இயக்கம் போராடிப் பெற்ற மாநில உரிமைகளை தாரை வார்க்கிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு பெறாமல் கல்வி உரிமை, நதிநீர் உரிமை, உணவு உரிமை, வரி விதிக்கு அதிகார உரிமை ஆகியவற்றை குறிப்பிடலாம். இதற்காக அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
4. டெண்டரில் 30 சதவிகிதம் ஊழல், தாது மணலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல், கிரானைட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல், குட்கா ஊழல், எல்.இ.டி பல்பு ஊழல் என எங்கும் கொள்ளை, எதிலும் ஊழல் என செயல்பட்டுவரும் அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் கிரிமினல் நடவடிக்கைக்காக நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
5.வாக்காளர் சேர்ப்புக்காக தேர்தல் ஆணையம் நடத்தும் முகாம்களை திமுக-வினர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக-வினர் போலி வாக்காளர்கள் சேர்ப்பதை தடுக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.
6.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் 2016-ம் ஆண்டுடன் முடிந்தபோதும் அதிமுக அரசு நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறது. இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உள்ளாட்சி தேர்தலை உடனே அறிவிக்க இந்தக் கூட்டம் கோரிக்கை வைக்கிறது.
நவம்பர் 7-ம் தேதி முதல் ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் எழுச்சிப் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனாலும் அது தொடர்பான தீர்மானம் இல்லை. அது குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.