தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென இன்று (06-01-2018) காலை, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து, தற்போதுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தினேன். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தொழிலாளர் பிரச்சினையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான எவ்வித விபரத்தையும் வெளியிடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.