அதிமுகவில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தனது ஆதரவு ஒபிஎஸ்-க்கு தான் என்பதை உறுதி செய்வது போல் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் இன்று ஒபிஎஸ் தலைமையில் இணைந்துள்ளார்.
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். தனது இயக்கம் மற்றும் நடிப்பில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இயக்குனர் பாக்யராஜ், அவரது தலைமையில் இணைந்துள்ளர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர். அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அதிமுகவில் இணைந்து நானும் பணியாற்ற உள்ளேன்.
இதற்காக தேவைப்பட்டால் நானே அனைவரையும் ஒன்றினைக்க முயற்சி செய்வேன். ஒபிஎஸ் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். தற்போது ஒரு சோதனை வந்துள்ளது மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஒ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கினைத்து செயல்பட வேண்டும்.
மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பலம் பெற வேண்டும். அதற்கு என்னால் என்ன செய்ய முடியுமோ எப்படி செயல்பட வேண்டுமே அப்படி செயல்பட தயாராக உள்ளேன். ஒரு தொண்டனாக அனைவருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.
திரையுலகின் எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜ் அவரது மறைவுக்கு பிறகு ஜானகி அணி ஜெயலலிதா ணி என்று தனித்தனியாக பிரிந்தபோது ஜானகி அணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு எம்ஜிஆர் பெயரில் தனி கட்சி தொடங்கிய அவர் சில வருடங்களில் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார் அதன்பிறகு அங்கிருந்து விலகிய பாக்யராஜ். கடந்த ஒரு வருடமாக அதிமுக குறித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தன்னை ஒபிஎஸ் தலைமையில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil