வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை குறித்து 9 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்தா புயல், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டது. புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது.
வர்தா புயலில் பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியம் சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என 2016 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புயலில் பாதிக்கபட்டவர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியம் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது.
எனவே அறிவித்த இழப்பீடு தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் தொகை மீனவர்களுக்கு வழங்கபட்டுள்ளதா? என்பது குறித்து அரசின் பதிலை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.