ஓகி புயலில் பலியான கன்னியாகுமரி மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஓகி புயலில் சிக்கி காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை மீட்கவும், கேரளாவைப் போல பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கக் கேட்டும் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இன்று 8 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ரயில் மறியல் நடத்துகிறார்கள். இதையொட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு ரூ.2 லட்சம் உட்பட ரூ.10 லட்சம் வழங்கப்படும். புயலால் தொழிலை தொடர முடியாத அளவுக்கு காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
குஜராத்தில் உள்ள மீனவர்கள் ஊர் திரும்ப படகுகளுக்கு டீசல் அளவு ரூ 1,000 லிட்டராக உயர்த்தபடும். உணவுப்படியாக மீனவர்களுக்கு தலா ரூ 2,000 வழங்கப்படும். கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும். மீனவர்களின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள ஏதுவாக பத்திரிக்கைகள் மூலம் தகவலை தெரியபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓகி புயலில் சிக்கி காயமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்படும். நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெயை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்களில் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் மூலம் மீனவர்களின் குழந்தைகளுக்கு திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கரை சேர்ந்த மீனவர்களின் விவரங்களை தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்க்கும் வரை மீட்பு நடவடிக்கைகளை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப போதுமான நிதியுதவி வழங்க வேண்டும். ஓகி புயலால் குமரி மாவட்டம் மின் கட்டமைப்பு, விவசாயம், சாலை போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. அரேபியா, குஜராத், மாலத்தீவு பகுதிகளில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை தொடர வேண்டும். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.