Advertisment

நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேன்டும்... தலைமை தேர்தல் அதிகாரிக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
K Balakrishnan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் - திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில், சனிக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகள் , 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது. அவர்கள், நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதல்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் பா.ஜ.க வேட்பாளர்  நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். 

நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,  “ரூ. 4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறோம்” என்று கூறினார். 

இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தை அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ. ராஜசேகரன், ஜி. செல்வா ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து அளித்துள்ளனர். அக்கடிதத்தில்,  “திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் - உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூபாய் 4.5 கோடி பணத்தை சனிக்கிழமை (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். 

தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது பா.ஜ.க வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும். நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இதேபோன்று பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

K Balakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment