Advertisment

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது அக்.,3-ல் குற்றச்சாட்டு பதிவு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு எதிராக செப்டம்பர் 3ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது அக்.,3-ல் குற்றச்சாட்டு பதிவு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர்க்கு எதிராக அக்டோபர் 3 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் 2004 முதல் 2007 வரை இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டது. அதன்படி, தயாநிதி மாறன், 2007 இல் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் கடந்த 2004 முதல் 2007ம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல் லில் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதித்து, அதி உயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் வழங்கப்பட்டு வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன், கண்ணன், கவுதமன், ரவி உள்ளிட்ட 4 பேர் சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்பு நேரில் ஆஜராகினர்.

கலாநிதி மாறன், கே.பிரம்மநாதன், வேலுசாமி உள்ளிட்ட மூன்று பேர் நேரில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். அதனை நீதிபதி ஏற்றுகொண்டார். அதே போல் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார். இதனை அடுத்து அன்று குற்றச்சாட்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

Kalanithi Maran Bsnl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment