Advertisment

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : தமிழகத்திற்கு நீர் அளவு குறைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu latest news

Tamil nadu latest news

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு அம்சம்! உச்ச நீதிமன்றத்தில் நெடுங்காலமாக இருந்து வந்த வழக்கு இது!

Advertisment

காவிரி நீர் பிரச்னை, நீண்ட காலமாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே நீடித்து வரும் விவகாரம்! கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மேல்முறையீடு செய்தனர். காவிரி நடுவர் நீதிமன்றம் 192 டிஎம்சி நீர் திறந்துவிட சொன்னது, போதாது என்றும் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்யது. அதேபோல், தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டிஎம்சி நீரில் 132 டிஎம்சியாக குறைத்து விட்டு மீதமுள்ள 60 டிஎம்சி தண்ணீரை தங்கள் மாநிலத்துக்கே தர வேண்டும் என்று கர்நாடகமும் தெரிவித்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தின. விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் கழிந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று(16.2.18) காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்குகிறது.

பகல் 12.15 : ‘காவிரி பிரச்னையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருவதாக டிடிவி தினகரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

பகல் 12.00 : தமிழகத்தின் நீர் அளவு குறைக்கப்பட்டிருப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ‘தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்து சரியான தகவல்களை தமிழக அரசு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.  14 டி.எம்.சி குறைந்திருப்பது வருத்தம்தான் என்றாலும், இந்தத் தீர்ப்பையாவது எப்படி அமுல்படுத்தப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்’ என்றார்.

பகல் 11.50 : காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் கடார்கி வரவேற்றார். ‘இரு மாநிலங்களுக்கும் பாதகமில்லாத தீர்ப்பு’ என்றார் அவர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘தீர்ப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். ஆனாலும் ஆரம்ப கட்ட தகவல்கள் அடிப்படையில் வரவேற்கிறோம்’ என்றார்.

பகல் 11.45 : அதிமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனாலும் இந்த ஒதுக்கீடு போதாது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

பகல் 11.30 : தமிழகத்தின் 20 டி.எம்.சி. நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டும், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

பகல் 11.15 : கர்நாடகாவுக்கு 184.75 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு 15 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

காலை 11.05 : காவிரி மேலாண்மை வாரியம், குடியரசு தலைவரின் மேற்பார்வையில் இயங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழகத்திற்கு ஆறுதலான அம்சம்.

காலை 11.00 : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மைசூர்-சென்னை மாகாணங்கள் இடையே 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

காலை10.50 : காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை விட, 14 டி.எம்.சி தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதை தமிழக விவசாய அமைப்புகள் ‘ஏமாற்றம் தருவதாக’ கருத்து கூறியிருக்கின்றன. ஆனாலும் இந்த உத்தரவையாவது கர்நாடகம் அமுல்படுத்த சம்மதிக்குமா? என்கிற கேள்வியையும் தமிழக விவசாயிகள் எழுப்புகிறார்கள்.

காலை 10.40 : கேரளாவுக்கும், புதுவைக்கும் நடுவர் மன்ற இறுதி உத்தரவில் வழங்கப்பட்ட நீரின் அளவை உச்சநீதிமன்றம் மாற்றவில்லை. தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கிய பங்கில் இருந்து 14 டி.எம்.சி. நீரை குறைத்து, அதை கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கியிருக்கிறது. பெங்களூரு மாநகர குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

காலை 10.35 : தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை ஆண்டு தோறும் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டும் என தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இது நடுவர் மன்ற இடைக்கால உத்தரவிலும், இறுதி உத்தரவிலும் அறிவிக்கப்பட்ட நீர் அளவை விட குறைவு.

காலை 10.30 : நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு காவிரி வழக்கில் இறுதி உத்தரவை வாசிக்கத் தொடங்கினர். ‘காவிரி நீரை எந்த ஒரு மாநிலமும் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது’ என நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.

காலை 9.30 : நடுவர் மன்ற இறுதி உத்தரவுப்படி, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு 192 டி.எம்.சி. என அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடுவர் மன்ற இடைக்கால உத்தரவில் 205 டி.எம்.சி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

காலை 9.00 : காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவு 2007, பிப்ரவரி 5-ம் தேதி வழங்கப்பட்டது. அதில் காவிரியின் மொத்த பயன்பாட்டு நீரான 740 டி.எம்.சி.யில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி., கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. என அறிவிக்கப்பட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment