தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் கர்நாடக மாநிலம் குடகு மலையில் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
இந்த 18 பேரில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில் போலீஸ் தேடுவதால் விடுதியில் இருந்து வெளியேறி தலைமறைவாக உள்ளார்.
அவரை பிடிக்க நாமக்கல் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு உள்ளனர். இன்று காலை வரை அவரை கைது செய்ய முடியவில்லை. அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்ணில் பழனியப்பன் பேசுவார் என்று நினைத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பணம் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவரும் குடகு விடுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டு தலைமறைவாக உள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் குடகு மலையில் முகாம் இட்டுள்ளனர்.
ஏற்கனவே தலை காவிரிக்கு புனித நீராட தங்க தமிழ்செல்வன் தலைமையில் சென்றவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அதில் செந்தில் பாலாஜி இல்லை. இதைத்தொடர்ந்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ. 4 கோடியே 25 லட்சம் வாங்கி செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை தேடி வருகிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் குடகுமலையிலும், இன்னொரு பிரிவினர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் முகாமிட்டுள்ளனர்.
இது தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் மீதும் ஏதேனும் புகார்கள் இருக்கின்றதா என்பதை உளவுத்துறை உதவியுடன் தயார் செய்து வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து உள்ளூர் போலீசாரே புகார் கொடுக்குமாறு கேட்டு வாங்குவதாக தெரிகிறது. இதையடுத்து, உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகவும், அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. இது தவிர சில போலீஸ் நிலையங்களில் அ.தி.மு.க.வினரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்கள் குவிகின்றன.
தற்போது குடகு விடுதியில் இருந்து செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விடுதியில் 10 பேர் மட்டுமே தங்கி இருப்பதாக தெரிகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொந்த தொகுதிக்கு திரும்பியதும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.