முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் அவர் சமுத்திரம் பகுதியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பக்கநாடு புறப்பட்டு செல்லும் போது வழியில் ரோட்டோரம் இருந்த 'அம்பாள்' டீக்கடையை பார்த்ததும் காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார்.
பின்னர் முதல்வர் பழனிசாமி அந்த கடையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் அமர்ந்து டீ குடித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் டீ குடித்தனர். இதனிடையே, கிராமத்தில் தேனீர் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது? என்று முதல்வர் கேள்வி எழுப்ப, கடைக்காரர் 'நன்றாக போகிறது சார்' என்றார்.
டீ குடித்த பின், நன்றாக இருந்ததாக கடை உரிமையாளரிடம் பாராட்டு தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அதற்குரிய தொகையை தானே அளித்தார். அப்போது பெண்கள் சிலர் கொண்டு வந்திருந்த மனுவை அவர் வாங்கிக் கொண்டார். இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் 'ரோஸி காண்டீன்' என டீ கடை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.