மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் உயிரிழந்த 4 கட்டட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 6லிருந்து 8 லட்சம் வரை இழப்பீடு வழங்க பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி மௌலிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசன், திருவேங்கடம், கருப்பைய்யா, வாசு கட்டட தொழிலாளர்களின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி பணியாளர் இழப்பீடு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பணியாளர் இழப்பீடு ஆணையர் சாந்தி, மௌலிவாக்கம் விபத்தில் உயிரிழந்த கட்டட பணியாளர் கருப்பைய்யா, வாசு, திருவேங்கடம் மற்றும் முருகேசன் ஆகியோர் குடும்பத்திற்கு 6 லிருந்து 8 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகையினை விபத்து நடந்த தேதியிலிருந்து தற்போது வரை ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியுடன் சேர்த்து 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.