நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தியது குறித்து ஜூன் 7க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இஷ்டசித்தி விநாயகர் கோவில் முன்பு மூன்று சக்கர வாகனத்தில் இளநீர் வியாபாரம் செய்து வரும் தாசகிரிபன் என்பவர், தன்னை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 2014-ன் படி குறிப்பிட்ட ஒரு பகுதியில் தான் வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ய குழுவை அரசு நியமிக்க வேண்டும். எந்த குழுவும் நியமிக்காத நிலையில் மனுதாரரை அப்புறப்படுத்த கூடாது என வாதிடப்பட்டது.
இதற்கு அரசுத்தரப்பில், சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், குழு அமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு பிறப்பித்த சட்டத்தை சென்னை மாநகராட்சி துரதிருஷ்டவசமாக இன்னும் அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளனர். அதனால் நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை ஜூன் 7ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அடையாறு மண்டல செயற்பொறியாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.