விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்வதை விடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த நரவரிகுப்பம் கிராமத்தில் ராஜப்பா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் 3 மாடிகள் கொண்ட பல்பொருள் அங்காடியை விதிகளை மீறி கட்டியுள்ளதாக கூறி வீட்டுவசதி துறை சீல் வைத்தது. மேலும் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை இடிக்க 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரவரி குப்பம் பேரூராட்சி உத்தரவிட்டது. இந்த இரண்டு உத்தரவுகளை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, கட்டிடத்தை இடிக்க பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இந்த வழக்கை தாக்கல் செய்தது துரதிர்ஷ்டவசமனது என வேதனை தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றும் வகையில் ஒரு மாதத்திற்குள் அக்கட்டிடத்தை இடிக்க வேண்டும். அக்கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், சுவாசிக்க இடமில்லாத அளவுக்கு புற்று நோய் போல பரவியுள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவதை விடுத்து அவற்றை அகற்ற உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார். இதேபோல அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்பொக்கில் ஆக்கிரமித்து வசித்து வரும் 200 குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என மற்றோரு வழக்கில் நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.