பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்றும், விஷ வாயு தாக்கி உயிரிழந்தோர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாய் கரம்சாரி அந்தோலன் என்ற அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு சுதந்திரம் அடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. மனிதத்தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க கடந்த 2013 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தபோதும் கூட பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அது இன்னும் நடைமுறையில் உள்ளது. அதனை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும், அதாவது மரணம் அடைந்தால் வழங்கப்படும் 9 லட்ச ரூபாய் இழப்பீட்டை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கி வேலை பார்க்க வற்புறுத்தும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தூய்மை பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றும் என நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“