ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா என விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அப்போது விஷாலை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து போலியானது என சுயேட்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம் குமார் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, விஷால் மனுவில் கையெழுத்திட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து, எங்கள் கையெழுத்து போலியானது என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுசூதணன் ஆட்கள் தான், எனக்காக முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்களை மிரட்டி, இப்படி சொல்ல வைத்துள்ளனர் என்றும், அதுகுறித்த ஆடியோவையும் விஷால் வெளியிட்டார்.
இருப்பினும், விஷாலின் வேட்புமனுத் தாக்கல் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா என விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதியலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.