பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடைச் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி 32 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க தனி குழுவை அமைப்பதை உறுதி செய்யும்படி மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பல இடங்களில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லையை எதிர்கொள்வதாக புகார்கள் உள்ளதாகவும், நூற்பாலைகளில் பணிபுரியும் 15 வயது சிறுமிகள் பணிச்சுமை மட்டுமல்லாமல், பாலியல் தொல்லைகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வி வாதிட்டார்.
விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடை மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, 18 ஆண்டுகள் கழிந்த பிறகும், பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர் எனவும் வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லை தடை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.