வி.கே.சசிகலா உறவினர் ‘ரிசர்வ் வங்கி’ பாஸ்கரனுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வி.கே.சசிகலாவின் சகோதரி மகள் சீதளா தேவி. அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவரை ‘ரிசர்வ் வங்கி பாஸ்கரன்’ என அடையாளப்படுத்துவார்கள்.
ரிசர்வ் வங்கி பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 1997 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998-ல் வழக்குப்பதிவு செய்தது. 1999-ல் சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
2001-ல் சாட்சிகள் விசாரணை தொடங்கி, 2008-ல் நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (16-ம் தேதி) இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.