பார் கவுன்சிலில் அரசியல் கட்சி நுழைவதை தடுக்க அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்னையில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து நடந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் பதிவு, சட்ட கல்லூரிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு பதிலளிக்க இந்திய பார் கவுன்சில் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்தார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனவும், பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களையும் பார் கவுன்சில் தேர்தலில் அனுமதிக்க கூடாது எனவும் நீதிபதி ஆலோசனை தெரிவித்தார்.
இந்த ஆலோசனைகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு முன் சமர்ப்பிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.