மொழி ரீதியாக பிளவை ஏற்படுத்தும் நோக்கிலும், விரோதத்தை தூண்டும் நோக்கில் பேசிய இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜாகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் (அக்டோபர்) தனியார் தொலைக்காட்சியில் (தந்தி டிவியில் கேள்விக்கு என்ன பதில்) நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் பாரதிராஜா, ஆட்சேபகரமான மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் மொழி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கிலும் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் பிறந்த அல்லது வசிக்கும் வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களை தமிழகத்தை ஆள அனுமதிக்க மாட்டேன் என கருத்து தெரிவித்தார். அவரின் இந்த கருத்தால் இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பொது ஒழுங்குக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட கோரி கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பதிவு தபாலில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே உடனடியாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, மனு தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.