Advertisment

ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Blue whale challenge

ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உலக அளவில் சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் "ப்ளூ வேல் சேலஞ்" எனப்படும் விளையாட்டு, ரஷ்யாவில் தோன்றியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பலர், உளவியல்ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த "ப்ளூ வேல்" விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பலி வாங்கி வருவது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 வயது இளைஞர் மனோஜ், ப்ளூ வேல் விளையாட்டினால் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர், கடந்த 30-ம் தேதியன்று தனது படுக்கை அறையில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் இவர் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி வந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் எனப் பல எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நிதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ப்ளூ வேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய இணையதள நிறுவனங்களுக்கு அறிவிப்புகள் வெயியிடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ப்ளூ வேல் பிரச்னை குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்வதாக அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும், ஷேர் இட், ஃபேஸ்புக் உள்ளிட்டவை மூலம் மட்டுமே இந்த விளையாட்டு பகிரப்படுகிறது எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, ப்ளூ வேல் விளையாட்டு பகிரப்படாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் என உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த விளையாட்டை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை வியாழக்கிழமைக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

Madurai High Court Blue Whale Challenge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment