நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதன் சங்கங்கள் எதிர்காலத்தில், நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல், மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத மனம் உடைந்த மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சூர்ய பிரகாசம் ஆஜராகி, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட நீட் தேர்வில் போட்டிபோட வைப்பது, ஒரு காலை கட்டி வைத்துக்கொண்டு ஓடச் சொல்வதற்கு சமமாகும். போதாக்குறைக்கு, அரசு ஆசிரியர்கள் கடந்த 90 நாட்களாக தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் பல்வேறு கருத்து தெரிவித்தார். ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது. போராட்டத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்கங்கள், அரசிடம் இருந்து வசூலித்து இழப்பீடு கொடுக்க உத்தரவிட நேரிடும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் சங்கம் வைத்து போராடி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராடவில்லை. ஆசிரியர்கள் சங்க போராட்டத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
மாநில பாடத் திட்டத்தில் படித்த அரசு பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள்தான் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இது வேதனை தருகிறது. வெட்கப்பட வைக்கிறது. பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது அதன் சங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறது.
நீதிமன்றத்துக்கு எதிராக சங்க நிர்வாகிகள் தொடர்ந்து கருத்து கூறுகின்றனனர். அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும். கல்விமுறை முன்னேற்றத்தில் இந்த நீதிமன்றம் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது. கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், இதில் நேரிடையாக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி ஏழை, எளிய, நடுத்தர பொதுமக்கள்தான். ஆசிரியர்கள் சங்கம் ஒன்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சங்கம் அமைப்பது போராட்டம் நடத்த மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. அனைத்து ஆசிரியர்களையும் நான் குறை சொல்லவில்லை. நல்ல ஆசிரியர்களும் உள்ளனர்.
கோர்ட் உத்தரவை மதிக்காத சங்கங்கள், ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்காலத்தில் நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.