கடனை திருப்பி செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது என வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. நாகையைச் சேர்ந்த தீபிகா எனும் மாணவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் அந்தனன் பேட்டையில் உள்ள செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற தீபிகா, கல்விக் கடன் கேட்டு தலைஞாயிறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை வங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிராகரித்தது.
வங்கியின் இந்த நிரகாரிப்பை ரத்து செய்து தனக்கு 3 லட்சத்து 40 ஆயிதம் ரூபாம் கல்வி கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றம் நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செவிலியர் படிப்பு கல்விக் கடன் திட்ட வரம்புக்குள் வராதது என்றும், மனுதாரரின் தந்தை ஏற்கனவே பல கடன்கள் வாங்கி செலுத்தாமல் இருப்பதால் தீபிகாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பல நபருக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. அந்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இதனால் அப்பாவி வங்கி ஊழியர்கள் தான் கடைசியில் பாதிக்கப்படுகின்றனர். கடன் சிறியதோ அல்லது பெரியதோ அதை வசூலித்தாக வேண்டும். கடனை பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள் பின்னால் வங்கிகள் ஒடுவதை விடுத்து, திருப்பி செலுத்த தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை ஆரம்பத்திலேயே நிராகரிப்பதே நல்லது என வங்கிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரர் தந்தை ஏற்கனவே பல கடன்கள் வாங்கி செலுத்தாமல் இருப்பதால் கல்வி கடன் கோரிய மனுவை வங்கி நிராகரித்தது பிறப்பித்த உத்தரவு சரி என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து தீபிகா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.