காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக விவசாயிகளின் வேட்டியை உருவப்பார்க்கிறது என திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், சுப்ரிம் கோர்ட்டில் பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டத்தைவிட தண்ணீரில் அளவு குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், காவிரி நடுவர் மன்றம் கூறிய படி, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
சுப்ரிம் கோர்ட் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டரில்,
‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள்
உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது.
மத்திய அரசோ
கிழிந்த வேட்டியையும்
பறிக்கப் பார்க்கிறது.
உழவர்கள் வேட்டி இழந்தால்
நாடு நிர்வாணமாகிவிடும்.’’
இவ்வாறு கவிதையை வெளியிட்டுள்ளார்.