ஆங்கில புத்தாண்டை ஒட்டி, டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவில் இந்து கோவில்களை திறந்து வைக்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, டிசம்பர் 31 ஆம் தேதி இரவு இந்து கோவில்கள் நடை சாத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது ஆகம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்பதால், நள்ளிரவில் கோவில்களை திறந்து வைக்க தடை கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தன் மனுவில், ஆகம சாஸ்திரத்தின்படி, இரவு 9 மணிக்குள் அர்த்தஜாம பூஜையை முடித்து நடையை அடைத்து விட வேண்டும். காலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையை திறக்க வேண்டும். இரவு நேரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில்களை இரவில் திறந்து வைக்க கூடாது என ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக் காட்டிய அவர், சைவ கோவில்கள் சிவராத்திரியின் போதும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு திறந்து வைக்க ஆகமம் வகை செய்துள்ளதால், அதை மீறி புத்தாண்டை ஒட்டி கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நாளை, விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.