நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டதால், குடும்பத்தினருடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, இணையத்தில் கேலிச்சித்திரம் வரைந்த லைன்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, கடந்த 6-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். நெல்லை போலீஸார், சென்னையில் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரது கைதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த அந்த கார்ட்டூனைப் பயன்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய கார்ட்டூனைப் பயன்படுத்தியதாக, கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளான பாரதி தமிழன், அசத்துல்லா ஆகியோர் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"சேப்பாக்கம் அருகே பத்திரிக்கையாளர்கள் மன்றம் அருகில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், நெல்லை நகர காவல் ஆணையர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் நிர்வாண நிலையில் நின்று, ஒரு குழந்தை எரிந்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற கார்ட்டூன் படம் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நடைபாதையிலும் பத்திரிகையாளர் மன்ற கட்டிடத்திலும் வைக்கப்பட்டு இருந்தது. எனவே பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்" என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.