முதல்வர், கலெக்டர் ஆகியோரை ஆபாசமாக சித்தரித்ததாக கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை கோர்ட் ஜாமீன் வழங்கியது.
பிரபல கார்டூனிஸ்ட் பாலா. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். தமிழில் பிரபல வார இதழில் பணியாற்றிய இவர், தற்போது அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இணையத்தில் கார்டூன் வரைந்து வருகிறார்.
சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கந்துவட்டி கொடுமையால் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து இறந்தார். இது குறித்து கார்டூனிஸ்ட் பாலா வரைந்த கார்டூனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் தங்கள் நிர்வாணத்தை பணக் கட்டுகள் கொண்டு மறைப்பது போலவும், குழந்தை தீயில் எரிவது போலவும் வரைந்திருந்தார்.
இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடுத்த புகாரின் பேரில், நெல்லை போலீசார் சென்னை மாங்காட்டில் கார்டூனிஸ்ட் பாலாவை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நெல்லை கொண்டு செல்லப்பட்ட பாலா, நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், கார்ட்டூனிஸ்ட் பாலாவை இருநபர் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், வரும் 9-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகவும் பாலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக கோர்ட் வளாகத்தில் கார்டூனிஸ்ட் பாலா நிருபர்களிடம், ‘கொலை செய்து விட்டு நான் கைதாகவில்லை. நான் ஒரு கார்டூன் வரைந்தேன். அதற்காக என்னை கைது செய்திருக்கிறார்கள். நான் தான் அந்த கார்டூனை வரைந்தேன். அம்மணமாக வரைந்தது உண்மைதான். அப்படித்தான் இங்குள்ள நிலைமை இருக்கிறது. மோடி முதல் எடப்பாடி பழனிச்சாமி வரையில் அப்படிதான் வரைவேன். தொடர்ந்து வரைவேன்’ என்றார்.
கோர்ட் வாளாகத்தில் பாலாவை விடுதலை செய்ய சொல்லி பத்திரிகையாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.