போக்குவரத்து தொழிலாளர் நிலுவைத் தொகை சுமார் 7000 கோடி ரூபாயை உடனே வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போராட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து சங்கங்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்டு போக்குவரத்தை சீரடைய உரிய உத்தரவிட வேண்டும் என வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் அதை ஏற்கவில்லை. ஸ்டிரைக் தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையை 8-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘பொதுமக்களின் நலன் கருதியே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்தோம். இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ, அதிகாரிகளோ அல்ல. சாதாரண மக்கள்தான். எனவே அந்தத் தடையை விலக்கிக் கொள்ள முடியாது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ 7000 கோடியை உடனே வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ‘போக்குவரத்துக் கழகத்தை அரசால் நடத்த முடியாவிட்டால், தனியாரிடம் விட்டுவிட வேண்டியதுதானே!’ என்றும் கேள்வி எழுப்பியது. வேலை நிறுத்தத்தை உடனே வாபஸ் பெறவும் நீதிபதிகள் வேண்டுகோள் வைத்தனர். பின்னர் இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம்.