பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மறியல் நடத்துகின்றன. குறைந்த அளவில் அமுலான கட்டண குறைப்பை ஏற்க மறுத்துவிட்டன.
பஸ் கட்டணத்தை தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட கட்டணத்தில் சிறிய அளவை குறைத்து தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது.
பஸ் கட்டணத்தில் நடைபெற்றுள்ள இந்த மாற்றம், வெறும் கண் துடைப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று (28-ம் தேதி) அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மார்க்சிஸ்ட் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று (29-ம் தேதி) மாநிலம் முழுவதும் மறியல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ‘தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஜனவரி 29-ம் தேதி (இன்று) பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் ஏற்கனவே திட்டமிட்டப்படி மறியல் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம்.
இதில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட அனைவருமே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அரசு பெயர் அளவுக்கு கண் துடைப்புக்காக கட்டணத்தை குறைத்துள்ளதாக நாடகம் ஆடுகிறது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை போராட்டத்தில் வலியுறுத்த உள்ளோம். அதன் பிறகு அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை 2 நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.
மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம். பஸ் கட்டண உயர்வுக்காக போராட்டம் நடத்தி சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்’. இவ்வாறு கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.