சென்னையில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையின் பிரதான ஏரியாவான சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அமைந்திருக்கிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற மருத்துவமனை இது. அபூர்வமான பல அறுவை சிகிச்சைகளை இங்கு ஏழை மக்களும் பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்த மருத்துவமனைக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்துள்ளது. சென்னை எழும்பூர் தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த கடிதத்தை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கனமழை தொடர்பான பணிகளில் மூழ்கியிருக்கும் போலீஸாருக்கு இந்த விவகாரம் புதிய தலைவலியாக அமைந்தது.