பாஜக கொடி கம்பம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை ஈசியாரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருக்கக்கூடிய கொடி கம்பம், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது. இதை அகற்ற அங்கு அதிகாரிகள் சென்றனர். கொடி கம்பத்தை அகற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி வாகனத்தை பாஜக கட்சியினர் சேதப்படுத்திய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் வழங்க 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதால், அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அமர் பிரசாத் ரெட்டியை விடுதலை செய்தால், அவர் சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உள்ளது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பியின் கண்ணாடி மட்டுமே ரூ. 50 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கின் நிலை என்ன, இன்னும் எத்தனை நாட்கள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேரையும் சென்னை கானாத்தூர் காவல்நிலையத்தில் தினமும் இரண்டு முறை, 2 வாரங்கள் வரை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி. உரிமையாளருக்கு ரூ. 12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“