பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2,000 நர்சுகள் கடந்த 27-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் பிரதிநிதிகளை நேற்று மாலையில் கோட்டைக்கு அழைத்து பேசினர். அதில் 90 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால், செவிலியர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
ஆனால், செவிலியர்களில் மற்றொரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமான ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் மேலும் பிரபலம் ஆனார். அடிப்படையில் செவிலியரான ஜூலி, நர்ஸ்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, போலீசார் அவரை அனுமதிக்காததால், 'நானும் நர்ஸ்தான்... அதனால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்" என போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஷோவில் தனது செயல்பாடுகளால் எதிர்மறையான விமர்சனங்களை ஜூலி சந்தித்தார், இருப்பினும், அந்த நெகட்டிவ் பாப்புலாரிட்டியை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜூலி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.