காலா திரைப்படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை எடுப்பதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ராஜ சேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலா படத்திற்கு தடை விதிக்ககோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது, 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரிகாலன் பட தலைப்பை ஆண்டு தோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு " கரிகாலன்" என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது "கரிகாலன்" என்ற தனது தலைப்பை பயன்படுத்தி ரஜினியின் நடிப்பில் காலா படம் தயாரிக்கப்பட்டு வருவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் தலைப்பை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பிப்ரவரி 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.