காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எ.முனுசாமி யை விட 304 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆர்.டி.அரசின் வெற்றியை எதிர்த்து முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் அரசு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தபால் ஓட்டுகள் என்னும் போது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக இருப்பதாக கூறி அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.