லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித் துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அருண் கோயல் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 4 பேர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபட்டது.
இந்த மனு விசாரணை நீதிபதி திருநீல பிரசாத், அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் ஜாமின் மனுவை கடந்த 6 ஆம் தேதி தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து இவர்கள் 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அருண் கோயல் உள்பட நால்வருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இவர்கள் நால்வரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10 மணிக்கு சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.