Advertisment

கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தாலான கொடியை அதிமுக உரிமை கோர முடியாது - டிடிவி தினகரன்

கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தாலான கொடியை அதிமுக மட்டும் உரிமை கோர முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தாலான கொடியை அதிமுக உரிமை கோர முடியாது - டிடிவி தினகரன்

கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தாலான கொடியை அதிமுக மட்டும் உரிமை கோர முடியாது என்று டி.டி.வி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி. தினகரன், மதுரை மேலூரில் பிப்ரவரி 15 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அக்கூட்டத்தில் கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொடியின் நடுவே, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் இடம் பெற்றுள்ளது.

இக்கொடியை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது . அவர்கள் தாக்கல் செய்த மனுவில், டிடிவி.தினகரனின் கட்சியின் கொடி அஇஅதிமுகவின் கொடியைப் போல கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இதுதொடர்பாக வேறு எந்த கட்சியும் அதிமுகவின் கொடியைப் போல ஒத்த வடிவமைப்பைப் பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே கட்சியின் 4- வது விதிகளில் தெளிவாக உள்ளது.

எனவே டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் புதிதாக உருவாக்கியுள்ள கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதிமுகவின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக டிடிவி.தினகரன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஇஅதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி. தினகரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடிக்கும், அதிமுக கொடிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கட்சியின் கொடி அளவு, அமைப்பு, அதில் இடம்பெற்றுள்ள உருவம் ஆகியவை அதிமுக கொடியில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.

கொடியையோ, நிறத்தையோ பயன்படுத்தக் கூடாது என உரிமை கோர அதிமுகவுக்கு அதிகாரம் இல்லை. திராவிடத்தை சார்ந்த எந்தவொரு கட்சியும் கருப்பு, சிகப்பு நிறத்தை தனியாகவோ, அல்லது வேறு அடையாளங்களுடனோ பயன்படுத்த முடியும். ஒரு கட்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது எதேச்சதிகாரம் கொண்டதாகும்.

1944ல் நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, தமிழக காட்சிகள் கருப்பு சிகப்பு அடங்கிய கொடியை பயன்படுத்துவது தொடர்கிறது.நீதிகட்சியில் இருந்து திராவிட கழகமாக மாறிய போதும், பெரியாரால் இந்த நிறங்கள் பயன்படுத்தபட்டன.

திராவிட கழகத்தில் இருந்து 1949 ஆம் ஆண்டு பிரிந்த அண்ணாதுரை திமுகவை தோற்றுவித்த போதும், இந்நிறங்கள் தொடர்ந்தது. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டு பிரிந்த எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்த போதும், இந்த நிறங்களை பயன்படுத்துவது தொடர்கிறது. கருப்பு சிவப்பு நிறத்தின் இடையே அண்ணாவின் படத்தை வெள்ளை நிறத்தில் அதிமுக பதித்ததை தவிர அதிமுக, திமுக இடையேயான கொடியில் எவ்வித வேறுபாடும் இல்லை. அதேபோல இதன்மூலம், மக்களிடமும் எந்த குழப்பமும் இல்லாத நிலையில்தான், தங்களது சின்னங்களையும் திமுக, அதிமுக ஆகியவை மக்களிடம் எடுத்து சென்றுள்ளனர். பெரியாரின் திராவிட கொள்கைகளை பின்பற்றுகின்ற அதிமுகவாகட்டும், தங்களது (அமமுக) அமைப்பாகட்டும், அனைத்து திராவிட கட்சிகளும் கருப்பு சிகப்பைதான் அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன. எனவே நாங்களும் திராவிட பாரம்பரிய அமைப்பை கொண்ட கட்சிதான்.

எங்களது கொடியில் கருப்பு, சிகப்பு ஆகிய நிறங்கள் 50% இடத்தை மட்டுமே பிடித்துள்ளனர். மீதமுள்ள 50% வெள்ளை நிற இடத்தில் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தியுள்ளோம். சாதாரணமாக யாரும் பார்த்தால் கூட திமுக, அதிமுக கொடிகளுக்கும், எங்கள் கொடிக்கும் வித்தியாசங்களை காணமுடியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றுபவர்கள் கருப்பு சிகப்பை பயன்படுத்திதான் வருகின்றனர். அதை அதிமுக மட்டும் உரிமை கோரமுடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், எந்த ஒரு கொடிக்கும் சட்டரீதியான பாதுகாப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவு படுத்தியுள்ளது.

இந்நிலையில், கருப்பு, வெள்ளை, சிகப்பு கொடி தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அதிமுக உரிமை கோர முடியாது. அறிவுசார் சொத்துரிமை அல்லது வணிக குறியீடு என்பது வியாபார நோக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசியல் கட்சியில் கொடியை பாதுகாப்பதற்கு அதனை பயன்படுத்த முடியாது. எனவே அப்படிப்பட்ட தவறான புரிதலுடன் வழக்கு தொடர்ந்துள்ள அதிமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதிமுக-வை பொறுத்தவரை அக்கட்சியினரின் வேட்டி, சேலை, துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றில் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டாலும், கொடியில் தனியாக வெள்ளை இல்லை. அதனால் வெள்ளை நிறத்தை நாங்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியாது. அதிமுக-வின் உண்மையான வாரிசு நான்தான் என்பதால், எனக்கும், மனுத்தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் சுமூக உறவு இல்லை. அதனால் என்னை வெளிநபர் என்றும், அவர்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் சொல்லிக் கொள்கிறார். ஜெயலலிதாவின் மறைவால் நடைபெற்ற ஆர்.கே. நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளேன் என்ற உள்நோக்கில் தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு அமமுக-வை தொடங்கியது என்பது தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக, ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் படியான தற்காலிக முடிவுதான். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்றோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்போ கிடையாது. அதன் அடிப்படையில், தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது. பல கட்சிகள் கருப்பு வெள்ளை சிகப்பு நிறங்களை பயன்படுத்துவதை மறைத்து அதிமுக இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. அதிமுக கொடியில் வெள்ளை நிறத்தில் அண்ணா படம் உள்ளது. அதே நிறத்தில் ஜெயலலிதா படத்தை, எங்கள் கட்சி கொடியில் பயன்படுத்த தடை கோர முடியாது.

கருப்பு என்பது ஒடுக்கப்பட்ட திராவிட மக்களின் துன்பங்களையும், அவற்றை ஒழிக்கும் நிறமாக சிகப்பும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் கருப்பு, சிகப்பு நிறங்கள் எதை குறிக்கிறது என்பதும், அதன் முக்கியத்துவம் என்ன என்பதும் எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர் செல்வத்துக்கோ தெரியாது.

கருப்பு, சிகப்புடன் மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட பல்வேறு கட்சி கொடிகளின் படங்களையும் பதில் மனுவில் இணைத்துள்ளோம். அதில் முதலில் தொடங்கப்பட்ட திராவிட கழகம் முதல் சமீபத்தில் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கொடி வரை அனைத்திலும் கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க அஇஅதிமுக தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

Chennai High Court Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment