‘டெல்லியில் இருந்து ஒருவர் என்னைத் தமிழ்ப் பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கிதான்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ஒருவர் டெல்லியில் இருந்து என்னைத் தமிழ்ப் பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கிதான். அறிவு, ஞானம் வரும்போது பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.
அரசியல்வாதிகள் தனியாக இருக்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என கற்றுக் கொடுத்ததை மறந்துவிட்டீர்கள். வேளாண் துறையை தொழில் துறையாக்கினால்தான் அனைவரும் வாழமுடியும். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமைகளையும், தொல்லைகளையும் கேட்டு வளர்ந்தவன் நான்.
விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை. சோறு சேகரிக்கவே வந்துள்ளேன். என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அது, இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. குளங்கள், ஏரிகளை சுத்தம்செய்ய, என்னிடம் உள்ள 5 லட்சம் பேரை அனுப்புகிறேன்” என்றவர், “மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை ரத்துசெய்யும் மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.