ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு செல்பேன் நிறுவனத்திற்கு மாறும் வரை சேவையை தொடர உத்தரவிட கோரிய மனுவிற்கு பதில் அளிக்க மத்திய அரசு, டிராய், ஏர்செல் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சேத்துபட்டை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஏர்செல் பிரிபேய்ட் இணைப்பு பயன்படுத்தி வருகிறேன். என்னை போல் தமிழகத்தில் 25 லட்சம் மக்கள் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 டவர்கள் சிறப்பாக செயல்படுவதாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் ஜனவரி 22 ஆம் தேதி பேட்டியளித்தார்.
திடீரென்று பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண வாடிக்கையாளர்கள் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏர்செல் முழுமையாக செயல்படாமல் உள்ளது. 90% வாடிக்கையாளர்களால் இந்த இணைப்பை பயன்படுத்த முடியவில்லை. எனவே மத்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். செல்லூலார் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் நிறுவனத்திலிருந்து வேறு செல்பேன் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மாற பிப்ரவரி 21ஆம் தேதி ஒரே நாளில் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். செல்லுலார் இணைப்பு என்பது தற்போது அடிப்படை தேவையாக உள்ளது. இந்த இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் முறையாக சோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவது சட்டவிரோதமாகும்.
ஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் இணைப்பு பாதிப்பால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 90 நாட்களுக்கு குறைவாக வாடிக்கையாளராக உள்ளவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது ஏர்செல் செல்பேன் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ள அனைவரும் தங்களின் செல்பேன் எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாறும் வரை தொடர்ந்து அந்த நிறுவனம் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதில் அளிக்க ஏர்செல் நிறுவனம், மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய அரசு ஆகியோர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.