அதிமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இபிஎஸ் அணியினர் 7 பேரும் ஓபிஎஸ் அணியினர் 5 பேரும் இடம் பிடித்தனர்.
#AIADMK News Bureau Co-ordinators pic.twitter.com/Iu1o3f8st1
— O Panneerselvam (@OfficeOfOPS) January 3, 2018
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜனவரி 3) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அதிமுக செய்தி தொடர்பு குழு உறுப்பினர்களின் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டறிக்கை மூலமாக வெளியிட்டனர்.
அதிமுக செய்தி தொடர்பாளர்களின் புதிய பட்டியல் வருமாறு :
1. சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), 2. பா.வளர்மதி (அதிமுக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்), 3. கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்), 4. வைகை செல்வன் (முன்னாள் அமைச்சர்), 5. ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர்), 6. கோ.சமரசம் (முன்னாள் எம்.எல்.ஏ.), 7. மருது அழகுராஜ் ( நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் முன்னாள் ஆசிரியர்), 8. கோவை செல்வராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ.), 9. பேராசிரியர் தீரன் (முன்னாள் எம்.எல்.ஏ.), 10. கே.சி.பழனிசாமி (முன்னாள் எம்.பி.), 11. ஏ.எஸ்.மகேஸ்வரி (முன்னாள் எம்.எல்.ஏ.), 12. வழக்கறிஞர் பாபு முருகவேல் (முன்னாள் எம்.எல்.ஏ.)
இவர்களைத் தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி மற்றும் அனைத்து வகையான சமூக ஊடகங்களில் பங்கேற்று கருத்து கூற அனுமதியில்லை என்றும், தோழமைக் கட்சிகளின் சார்பில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி மட்டுமே ஊடகங்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.
அதிமுக செய்தி தொடர்பாளர்கள் புதிய பட்டியலில் இடம் பிடித்த 12 பேரில் பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் ஆகிய 5 பேர் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். எஞ்சிய 7 பேர் இபிஎஸ் அணியினர்!
ஓபிஎஸ் தனி அணி கண்டபோது, மொத்த நிர்வாகிகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே அவரது பக்கம் நின்றார்கள். ஆனால் தற்போது செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் கணிசமான இடங்களை ஓபிஎஸ் அணியினர் கைப்பற்றியிருப்பது, கட்சிக்குள் ஓபிஎஸ் தரப்பு கை ஓங்குவதாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தே.மு.தி.க.வில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு வந்த பாபு முருகவேல், த.மா.கா.வில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு வந்த மகேஸ்வரி ஆகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓபிஎஸ் தரப்பு இந்தப் பதவிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பது அதிமுக.வில் இருந்து ஓபிஎஸ் அணியில் தொடர்ந்த சில பிரமுகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.