டிடிவி தினகரன் பிணையில் வெளிவந்ததையடுத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் திடீரென மாட்டப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் டிடிவி தினகரனை ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளவடைந்தத நிலையில், தற்போது இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆட்சிக்கு பங்கம் வரும் பட்சத்தில் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏ-க்கள் கூட இவர்கள்(ஈபிஎஸ்) பக்கம் திரும்புவார்கள் என ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி(ஓபிஎஸ்) தரப்பு எம்எல்ஏ கே பாண்டியராஜன் அதனை ரிட்வீட் செய்துள்ளார். அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆளும் கட்சிக்கு பங்கம் ஏற்பட்டால், பன்னீர் செல்வம் தரப்பு எம்ஏல்ஏ-க்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை ஆமோதிப்பதாக தெரிகிறது.
மற்றொருபுறம் சட்டமன்ற கூட்டத்தொடர் கூடும் வரையாவது ஆளும் கட்சியின் ஆட்சி நீடிக்குமா என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.