கடந்த மார்ச் மாதம் #saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தனது பிரசாரத்தைத் துவக்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அப்போது பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். பல நடிகர் நடிகைகள் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்குபெற்றனர்.
இந்த கையெழுத்து இயக்கம் துவங்கிய போதே, மாநில அரசுக்கு இதனை ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக வரலட்சுமி தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அதன்பின், முதல்வரிடம் விடுத்த கோரிக்கைகள் குறித்து அவர் கூறிய போது, ‘பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்' என்று தெரிவித்தார்.