சிவாஜி கணேசன் அரசியலுக்கும், வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டவர் என நடிகர் நாசர் புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு நடிகர் நாசர் பேசும்போது: இந்த விழாவினை துவக்கி வைத்து சிறப்பு செய்த துணை முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வத்திற்கு நன்றி. குறுகிய காலத்தில் இந்த மணி மண்டபம் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கூறியதுபோல சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவர். இந்த மணிமண்டபம் ஒரு சிறிய குறியீடு தானே தவிர தமிழக மக்களின் மனதிலும் அவர் வீற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவை பேசக்கூடிய சினிமாவாக, நடிகர்கள் நடிக்க வேண்டும் என்ற பெரிய இலக்கணத்தை கொண்டு வந்து திணித்தவர். அவருக்காக இந்த மணிமண்டபம் இருப்பது மிக சிறப்பு வாய்ந்ததாகும். சிவாஜி கணேசன் எங்களுக்கெல்லாம் தந்தை போன்றவர். நாங்கள் அவரை அப்பா என்றே மனதார கூப்பிடுவோம் என்று பேசினார்.