தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், " ஹைதராபாத்தில் இன்று சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறியற்ற கொவிட் பாதிப்புகள். மருத்துவர்களின் பாதுகாப்பில் நல்ல நிலைமையில் இருக்கிறார்! வரும் நாட்களில், அவரது உடல்நிலை குறித்து நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
மகள் வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், " அப்பா, சரத்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹைதரபாத்தில் உள்ள அவர் சிறப்பாக நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வருகிறார். தொடர்ந்து தகவல்களை பரிமாறிக் கொள்வேன்" என்று தெரிவித்தார்.
நடிகர் சரத்குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.