மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியாகி உள்ள 'துப்பறிவாளன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் ஓடும் தியேட்டர்களுக்கு படக்குழுவினர் சுற்றுப்பயணம் செய்து நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக கோவையில் தியேட்டர்களை நேரில் பார்வையிட்ட பின்னர் நடிகர் பிரசன்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "துப்பறிவாளன் படம் தமிழகம் முழுவதும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது டிடெக்டிவ் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சில காவல்துறை நண்பர்கள் உதவி செய்தனர். இணையதளத்தில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் திருடர்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்கிறார்கள்.
டைரக்டர் மிஷ்கின், ஒரு ஆண்டாக கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளார். தியேட்டர்களில் படத்தை பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்களை தடுக்க முடியாது. தொழில்நுட்பங்களில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி திருட்டு வி.சி.டி.க்கள் மூலமாக படங்கள் வெளி வருகிறது. அதையும் மீறி தியேட்டர்களில் படம் பார்க்கத் தான் மக்கள் விரும்புவார்கள். தியேட்டரில் பார்க்கும் அனுபவம் சிறிய மானிட்டரில் பார்க்கும் போது கிடைக்காது.
தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது. தற்போதைய அரசியல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை. அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக இயங்கவில்லை.
குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ துறையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார். அரசியல் மாற்றத்தை தர கமலாக இருந்தாலும் சரி, திருமுருகன் காந்தியாக இருந்தாலும் சரி மக்கள் ஏற்பார்கள். அனிதா மரணம் தங்களது வீட்டில் உள்ளவர் இறந்தது போன்ற துயரத்தை திரைத்துறைக்கு அளித்தது" என்றும் பிரசன்னா தெரிவித்துள்ளார்.