சென்னையைச் சேர்ந்த தம்பதி தனது 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் உறவினர்களுடன் கேரளா மாநிலம் சென்று கொண்டிருந்தனர். திருவனந்தபுரத்தில் திருமண விழா முடிந்த பிறகு, நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டனர். குடும்பத்துடன் ஒன்றாகத் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தனர்.
அந்த ரெயில் திருப்பூரைக் கடந்து ஈரோடு நோக்கி நள்ளிரவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது அக்குடும்பத்தின் 9 வயது சிறுமியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் பயத்தில் அந்தச் சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். உடனே உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் குடும்பத்தினரும், சக பயணிகளும் எழுந்தனர்.
தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அந்தச் சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். இதனால் அவர்கள் சக பயணிகள் உதவியுடன் குற்றவாளியை பிடித்தனர். இதற்கிடையே அந்த ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. உடனடியாக அந்த நபரை ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் (வயது 57) என்பதும், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும் இவர், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுமியிடம் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பிரேம்ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.