சோழிங்கநல்லூர் மகளிர் விடுதி மாடியில் 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்!
சென்னை சோழிங்கநல்லூரில் மகளிர் விடுதி நடத்தி வருபவர், எங்கையா (வயது 65). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், குடும்பத்தினருடன் இங்கு தங்கியிருந்தார்.
எங்கையாவின் மகள்கள் மேகா, சின்னவெங்கம்மா, பேத்திகள் நுதீக், நிஜிதா, பேரன் நாக சேத்தனா, ஒரு வயது பெண் குழந்தை சிவப்பிரியா ஆகிய அனைவரும் விடுதியிலேயே தங்கி வசித்து வந்தனர். நேற்றிரவு விடுதியின் மொட்டை மாடியில் எங்கையா மகள்கள், பேரன், பேத்தி என 7 பேரும் கேக் மற்றும் குலோப் ஜாமூனில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.
காலையில் விடுதியில் உள்ளவர்கள் மொட்டை மாடிக்கு சென்ற போது 7 பேரும் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து எங்கையாவை சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையிலும், மேகா, சின்னவெங்கம்மாவை சென்னை தனியார் மருத்துவமனையிலும், ஒரு வயது குழந்தை உட்பட 4 சிறுவர்களை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளபோகிறோம். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். நீ முன்னாலே போனா நான் பின்னாலே சாகனும். தனித்தனியே சாவுவதை விட அனைவரும் ஒன்றாக சாகலாம் என முடிவெடுத்துள்ளோம்.
அத்தை, மாமா நீங்கள் அனைவரும் நன்றாக இருங்கள். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் கூறினர். தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.